முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை சென்னை சட்டசபை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றி உள்ளார். 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கை முதல்வர் அலுவலகமாக மாற்ற ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாரம்பரியமிக்க சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் தமிழக முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து பல முதல்வர்கள் பணியாற்றி உள்ளனர். முந்தைய முதல்வர் ஸ்டாலினும் இந்த அலுவலகத்தில் இருந்து தான் பணியாற்றினார்.ஆனால் தற்போது முதல்வராகி உள்ள விஜய் அந்த அலுவலகத்தை விரும்பவில்லை. அவர் புதிய அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்திற்கு பதில் அதன் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கை முதல்வர் அலுவலகமாக மாற்ற விஜய் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கூட்ட அரங்கை முதல்வர் அலுவலகமாக மாற்ற உடனடியாக முதல்வர் அலுவலகம் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணியை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் இந்த கூட்ட அரங்கை முதல்வர் விஜய்யின் அலுவலகமாக மாற்ற வேண்டும் என்றால் 6 மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் முதல்வர் அலுவலகமோ 3 மாதத்துக்குள் பணியை கட்டாயமாக முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால் இந்த 3 மாதத்துக்குள் பணியை முழுவதுமாக முடிப்பது சிரமம் என கூறப்படுகிறது. இதனால் இந்த பணியை மேற்கொள்ள பல ஒப்பந்ததாரர்களும் தயங்கி வருகின்றனர். இதனால் ஒப்பந்தாரர்கள் இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் கூட கூட்ட அரங்கை முதல்வர் அலுவலகமாக மாற்றுவதற்கான தொடக்க பணிகள் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுத்தம் செய்யும் பணிகள் விரைந்து நடந்து வருகிறது.புதிதாக அமைய உள்ள அலுவலகத்தில் முதல் அமைச்சரின் செயலாளர்கள், மீட்டிங் அறை, வெயிட்டிங் ஏரியா, டைனிங் ஹால் என தற்போதைய முதல்வர் அலுவலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது.
இதுபற்றி பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ”முதல்வரின் புதிய அலுவலகத்திற்காக அரசு சார்பில் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகளுக்காக ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. குறுகிய காலஇடைவெளியில் பணியை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் பல ஒப்பந்தாரர்கள் தயங்குகின்றனர். இருப்பினும் ஒப்பந்தாரர் கண்டுபிடித்து அடுத்த வாரத்தில் பணிகள் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.



