திருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகிலன் – ஹேமா தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில் இருக்கக்கூடிய உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரே காரில் சென்றுள்ளனர். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் மீண்டும் பல்லடத்தில் இருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதி வேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரி மோதிய வேகத்தில் கார் முழுவதுமாக நசுங்கிய நிலையில் வந்த காரில் இருந்த ஹேமாவின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் அவர்களது குழந்தைகள் ஸ்ரீநித்து ,கனிஸ் ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் ஹேமா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்டவுடன் அந்த லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



