பாட்டிலுக்கு இனி ரூ.10 கூடுதலா கேட்பீங்க.. டாஸ்மாக் கடையை கோர்ட்டுக்கு இழுத்து ரூ.6,000 பெற்ற நபர்!

தமிழகத்தில் டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய டாஸ்மாக் கடையை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு இழுத்து ரூ.6 ஆயிரம் இழப்பீடு பெற்றுள்ளார் ஒருவர். என்ன நடந்தது? என்பது பற்றி பார்க்கலாம்.
சென்னை மாதவரத்தில் 8924 என்ற எண்ணில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் தேவராஜன் என்பவர் சென்றார். அவர் 180 மில்லி மதுபானம் வாங்கினார். அதன் எம்ஆர்பி விலை ரூ.140 ஆகும். ஆனால் அவரிடம் ‘டெபிட் கார்டு’ மூலம் ரூ.150 வாங்கப்பட்டது.
எம்ஆர்பி (பாட்டிலின் அதிகபட்ச விலை) விலையை விட ரூ.10 அதிகம் வசூலித்ததால் அவர் அதிருப்தி அடைந்தார். மேலும் அதற்கான பில் தரும்படி கேட்டார். ஆனால் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் பில் கொடுக்க மறுத்துவிட்டார். அதேபோல் கூடுதலாக வசூலித்த ரூ.10யையும் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி நடந்தது.
இதுதொடர்பாக தேவராஜன் சென்னை (வடக்கு) நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், ”மதுபான விற்பனை என்பது நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வராது. இதனால் புகார் அளித்த நபர் நுகர்வோராக கருத முடியாது. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை நுகர்வோர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ”எம்ஆர்வி விலையை விட கூடுதலாக ரூ.10 டாஸ்மாக் கடை வாங்கி உள்ளது. அதற்கான பில்லை வழங்க மறுத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் அடிப்படையில் பார்த்தால் பில் வழங்க தவறுவதும், குறிப்பிட்ட பொருளின் மீது அச்சிடப்பட்ட எம்ஆர்பி விலையை விட ரூ.10 அதிகமாக வசூலிப்பதும் சேவை குறைபாடாக கருதப்படுகிறது. அதோடு இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கருதப்படுகிறது. இதனால் இந்த வழக்கு பொருந்தும்.
எனவே கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாய் உட்பட மொத்தம் 5,000 ரூபாயை இழப்பீடாகவும், வழக்குச் செலவுக்காக 1,000 ரூபாயையும் இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு டாஸ்மாக் கடை சார்பில் வழங்க வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் வழங்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் அந்த தொகையை வழங்க வேண்டும் என்று கூறி அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரையும் பொறுப்பாக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அது ஏற்கப்படவில்லை. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சேவை குறைபாட்டிற்கு குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடை மட்டுமே பொறுப்பேற்க முடியும்.ஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் ஏதுமில்லை. டாஸ்மாக் நிர்வாகத்தை குற்றவாளியாக்க முடியாது எனக்கூறியதோடு டாஸ்மாக் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய கோரிக்கையையும் நிராகரித்தது.
அதேவேளையில் இப்படியான சேவை குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளை அமல்படுத்துவது டாஸ்மாக் நிறுவனத்தின் பொறுப்பு என்று அறிவுரை வழங்கியது.



